தொலைந்த செல்போன்களை எளிதில் கண்டறியும் வகையில் ஒன்றிய அரசு சார்பில் உருவாக்கப்பட்ட புதிய வலைத்தளம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
காணாமல் போன மற்றும் திருடுப்போன செல்போன்களை எளிதில் கண்டறியும் வகையில் ஒன்றிய அரசு சார்பில் புதிய வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சிஇஐஆர்(CEIR) என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதி டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இது இன்று முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் மொபைல் போன்கள் திருடு போனால் அவற்றை முடக்கவும் டிராக் செய்யவும் முடியும்.
செல்போனின் மாடல், ஐஎம்இஐ(IMEI) எண்கள், திருடப்பட்ட இடம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். தகவல் சரியாக இருந்தால் 24 மணி நேரத்துக்குள் செல்போன் முடக்கப்படும். பின்னர் அவற்றை கண்காணித்து மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.