அந்தமான் - நிக்கோபரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் -- நிக்கோபர் தீவில் உள்ள 'கேம்ப் பெல் பே' என்ற பகுதியின் வடக்கில் நேற்று பகல் 1:15 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. பின் 2:59 மணியளவில் நிக்கோபர் தீவின் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது. மூன்றாவது முறையாக நிக்கோபர் தீவின் அருகே மாலை 4:01க்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நான்காவது நில நடுக்கம் மாலை 5:47 மணிக்கு ஏற்பட்டு 5.5 ஆக பதிவானது.
வங்கக்கடலுக்கு அடியில் தொடர்ந்து நான்கு முறை நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என புவியியல் மையம் தெரிவித்தது. இருப்பினும் அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கத்தால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விபரம் குறித்து எதுவும் தகவல் இல்லை.