பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான ‘கிப்ட் சிட்டி’ வளாகம், நாட்டிலேயே முதல்முதலாக அதிநவீன வசதிகளுடன் குஜராத்தின் காந்தி நகரில் சபர்மதி ஆற்றின் கரையோரத்தில் உலகத் தரத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக கடந்த 2006-07-ல் மோடி இருந்தபோது உருவாக்கப்பட்ட கனவு நகர திட்டம் இது. சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ள திறன்மிகு நகரங்கள்போல, ரூ.76 ஆயிரம் கோடியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாக ஒரு நகரத்தை உருவாக்க திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக வளர்ச்சி கண்டு, தரமான சாலை, தெரு விளக்குகள், கழிவுநீர், திடக்கழிவு மேலாண்மை என பல்வேறு வசதிகளுடன் உருவாகி வருகிறது. நாட்டிலேயே முதல்முதலாக, சர்வதேச நிதி சேவைகள் மையம் (ஐஎப்சிஏ) இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
கிப்ட் சிட்டியில் வணிக பயன்பாட்டுக்கு 67 சதவீதம், குடியிருப்புகளுக்கு 22 சதவீதம், பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட சமூகம் சார்ந்த கட்டமைப்புகளுக்காக 11 சதவீதம் என நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ‘தானியங்கி கழிவு சேகரிப்பு மையம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வேறு எங்கும் இல்லை என்று கிப்ட் சிட்டியின் மக்கள் தொடர்பு பொது மேலாளர் நிஸ்ரக் ஆச்சார்யா தெரிவித்தார். இந்த திட்டங்களை பிற மாநிலங்களின் அதிகாரிகள் வந்து பார்த்து, செயல்படுத்த முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.