இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு - யுஐடிஏஐ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய சாட்பாட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'ஆதார் மித்ரா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாட்பாட் மூலம், ஆதார் தொடர்பான சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் பிவிசி நிலை அறிதல், புகார்களை பதிவு செய்தல் மற்றும் புகார்கள் குறித்த நிலையை அறிதல் போன்ற பல்வேறு தகவல்களைப் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'ஆதார் மித்ரா' சாட்பாட், மக்களின் குறைதீர்க்கும் பொறிமுறைகளில் ஒன்றாக இயங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சேவையை யுஐடிஏஐ தளத்தில் இருந்து பெற முடியும் எனவும், தற்போதைய நிலையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் சேவைகள் வழங்கப்படுவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. யுஐடிஏஐ தளத்தில், வலது புற கீழ் பகுதியில் இந்த சாட் பாட் இடம்பெற்றுள்ளது. அதனை கிளிக் செய்து, பயனர்கள், தங்களுக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.