ஞாயிறு, விடுமுறை நாட்களில் ஆதார் சேவை மையம் செயல்படும் என்று சென்னை பொது அஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள பொது அஞ்சல் அலுவலகத்தில் தேசிய அஞ்சல் வாரம் கடந்த 9-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி பள்ளிகளில் சேமிப்பு முகாம் நடத்தப்பட்டது. 11-ம் தேதியன்று தபால்தலை நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு தபால்தலை விநாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று அஞ்சல்கள் மற்றும் பார்சல் தினம் கொண்டாடப்பட்டது.
அஞ்சல் அலுவலகம் வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்து விளக்குவதற்கும் கருத்துகளைப் பெறுவதற்கும் வாடிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று அந்தியோத்தியா திவாஸ் கொண்டாடப்படுகிறது. அப்போது ஆதார் விழிப்புணர்வு முகாம்கள், சாமானியர்களுக்கான தபால் அலுவலக சேமிப்பு மேளாக்கள் நடத்தப்படும். மேலும், பொது அஞ்சல் அலுவலகம் ஆதார், பாஸ்போர்ட், பொது சேவை மையம் போன்ற வழக்கமான குடிமக்கள் சேவைகளை வழங்கி வருகிறது.
குறிப்பாக ஆதார் சேவை மையம் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தின் முதன்மை அஞ்சல் அதிகாரி சு.பாக்கியலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.