மண்ணில் புதைந்திருந்த தமிழர்களின் வரலாறு முதன்முதலில் வெளியுலகிற்கு தெரிய வந்தது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகள் மூலமாகத்தான். ஆதிச்சநல்லூர் எனும் ஊர் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இரும்புக்கால மற்றும் வரலாற்றுத் துவக்ககாலத் (பெருங்கற்காலம்) தொல்லியல் இடமாகும். “ஆதி தச்சநல்லூர்” என்ற பெயர் மருவி காலப்போக்கில் ஆதிச்சநல்லூர் என மாறியதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் புதைமேடுகளே அதிகமாக் கிடைத்தன. மக்கள் வாழிடம் குறித்த எந்த தொல்லியல் ஆதாரங்களும் கடந்த நூற்றாண்டு வரையில் கிடைக்கவில்லை. முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் இடுகாட்டையும் சேர்த்து மக்கள் வாழிடமும் கண்டறிப்பட்டு, தமிழகத்தில் ஒரு வளர்ச்சியடைந்த நாகரிகம் இருந்ததற்கான அடையாளத்தை மீட்டுத் தந்தது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் அறியப்பட்ட வரலாற்று உண்மைகளின் தொகுப்பு இதோ:
ஆதிச்சநல்லூர் முதல் ஆய்வு:
1876ம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்தில், ரயில் பாதை அமைப்பதற்கான சரளைக் கற்களைத் தோண்டி எடுப்பதற்காக ஆதிச்சநல்லூர் பகுதியில் குழிகளை வெட்டியபோது பானை ஓடுகளும் பிற பொருட்களும் தென்பட்டன. அப்போதுதான் இந்தப் பகுதியில் பெரியளவிலான புதைமேடு இருப்பது முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. பெர்லினைச் சேர்ந்த எஃப். ஜகோர் மற்றும் அக்காலத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஸ்டூவர்ட் ஆகிய இருவரும் இந்தப் பகுதியில் முதல் அகழாய்வைத் தொடங்கினர். பல மண் பாண்டங்கள், இரும்பினாலான பொருட்கள், எலும்புக்கூடுகள் ஆகியவை ஆய்வில் கண்டெடுக்கப்பட்டு பெர்லினுக்கு கொண்டு செல்லப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வுகள் அம்பலப்படுத்தின. மேலும் அவரது ஆய்வு முடிவுகள் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்து, வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய அவசியத்தையும் உணர்த்தின.
ஆதிச்சநல்லூர் இரண்டாம் ஆய்வு:
1899-1900ல் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர் அலெக்ஸாண்டர் ரியா, ஆதிச்சநல்லூரைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு சென்று, சிறிய அளவில் குழிகளைத் தோண்டி ஆய்வுகள் மேற்கொண்டார். பின்னர் 1903-04ல் பாரீசைச் சேர்ந்த லூயி லாபிக்குடன் இணைந்து பெரிய அளவிலான அகழாய்வுகளை ரியா மேற்கொண்டார். சரளைக் கற்களைத் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தைச் சுற்றிப் பல பொருட்கள் இங்கிருந்து சேகரிக்கப்பட்டன.
மேலும், உலகில் கண்டறியப்பட்ட தொன்மையான நதிக்கரை நாகரிக வழக்கம் இப்பகுதியிலும் இருந்திருக்கக் கூடும் என்ற நோக்கில் பாளையங்கோட்டையிலிருந்து தாமிரபரணி ஆறு கடலில் கலப்பது வரை நடந்துசென்று 38 தொல்லியல் தலங்களை அடையாளம் கண்டார் ரியா. அப்போது ஆதிச்சநல்லூர் புதைமேடு அருகில், மக்கள் வாழ்ந்த இடமாக தாமிரபரணி ஆற்றின் வடபகுதியில் உள்ள கொங்கராயங்குறிச்சி அடையாளம் காணப்பட்டது. இந்தப் பகுதியில் கிடைத்த மண்பாண்டங்கள் வேறு விதமாக இருந்தன. இதன் மூலம், இறுதிச் சடங்குகளுக்கெனவே தனியாகப் பானைகளைச் செய்யும் பழக்கம் இருந்திருப்பதும் கண்டறியப்பட்டது.
அலெக்ஸாண்டர் ரியா காலத்தில் கிடைத்த எலும்புகள் முதலில் எட்கர் தர்ஸ்டனாலும் பிறகு 1970களில் கே.ஏ.ஆர். கென்னடியாலும் ஆராயப்பட்டன. அந்த ஆய்வுகளில் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், எலும்புக் கூடுகளைப் பொறுத்தவரை, ஹரப்பாவில் வாழ்ந்த மக்களின் எலும்புக்கூடுகளைப் போன்றே ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவர்களின் எலும்புக்கூடுகளும் இருப்பது கண்டறியப்பட்டது. இதுவே சிந்து வெளி மக்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பை அறிவியல் ரீதியாக எடுத்துச் சொன்ன முதல் ஆதாரமாகும்.
ஆதிச்சநல்லூர் மூன்றாம் ஆய்வு:
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 2004 - 2005 காலகட்டத்தில் சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி. சத்யமூர்த்தியும் அவரது குழுவினரும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வைத் தொடங்கினர். இந்த ஆய்வின்போது, 178 முதுமக்கள் தாழிகள் தோண்டி எடுக்கப்பட்டன. பல பானைகளில் மடக்கிவைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட மனிதர்களின் முழு எலும்புக்கூடுகள் கிடைத்தன. மேலும், மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாய் குவார்ட்ஸ் மணிகள், அடுப்பு போன்றவையும் இவரது ஆய்வில் கிடைத்தன.
ஆய்வாளர் சத்தியமூர்த்தி, மக்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் பகுதியில் சீரான வடிவத்தில் உள்ள கோட்டைச் சுவரையும் கண்டுபிடித்தார். மேலும், இந்த கோட்டையின் உட்புறத்தில் குயவர்களின் சிறு குடியிருப்பையும் கண்டறிந்துள்ளார். மூன்று பானைச்சூளைகளும் பானைகளைச் சுட்ட சாம்பலும் கரியும் உடைந்த பானையோடுகளும் அக்குடியிருப்பில் கிடைத்துள்ளன. அதோடு, இரும்புக் கத்தியும் பாசி மணிகளின் உருவாரங்களும் கார்னேலியன் மணிகளும் கோவக்சு மணிகளும் பெருங்கற்காலக் குறியீடுகளைக் கொண்ட பானையோடுகளும் எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும் இக்கோட்டைச்சுவர் இருந்த பகுதிக்குள் கிடைத்துள்ளன.
இந்த ஆய்வை நடத்திய டி. சத்யமூர்த்தி அடுத்த ஆண்டே பணி ஓய்வு பெற்றுவிட, ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான அறிக்கை எழுதப்படாமலேயே இருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள்கூட நடைபெற்றன. இந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர் சத்யபாமா பத்ரிநாத் எழுதிமுடித்து, சமர்ப்பித்திருக்கிறார்.
ஆய்வறிக்கை கூறும் தமிழக வரலாறு:
ஆதிச்சநல்லூரின் 2004-05ல் நடத்தப்பட்ட அகழாய்வுகளின் ஆய்வறிக்கை பல உண்மைகளை உலகிற்கு சொல்லியது. அவை:
தாழிகளில் இறந்தவர்களை புதைக்கும் வழக்கம்:
ஆதிச்சநல்லூர் புதைமேட்டைப் பொறுத்தவரை, இங்கு இறந்தவர்களைப் புதைப்பது இரண்டு விதமாக நடந்திருக்கிறது. ஒன்று, இறந்தவர்களின் உடலை முழுமையாகப் புதைப்பது. இரண்டாவது, இறந்தவர்களை வேறு இடத்தில் புதைத்து, சில காலத்துக்குப் பிறகு அந்த உடலில் எஞ்சிய எலும்புகளைச் சேகரித்து மீண்டும் புதைப்பது. முதலாவது வகையில் புதைப்பதற்கு பெரும்பாலும் சிவப்பு நிறப் பானைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாவது வகையில் புதைப்பதற்கு, கறுப்பும் சிவப்பும் கலந்த பானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிருந்த முதுமக்கள் தாழிகள் மூன்று அடுக்குகளாக புதைக்கப்பட்டிருந்தன. ஆழத்தில் இருந்த அடுக்கில், இறந்தவர்களின் உடல்கள் முழுமையாக புதைக்கப்பட்டிருந்தன. நடுவில் இருந்த அடுக்கில் உடல்கள் முழுமையாக புதைக்கப்பட்டிருந்த தாழிகளும், எச்சங்கள் புதைக்கப்பட்ட தாழிகளும் கிடைத்தன. மேலே இருந்த அடுக்கில் பெரும்பாலும் எச்சங்கள் புதைக்கப்பட்ட தாழிகளே கிடைத்தன. மேலும், இப்படி மூன்று அடுக்குகளாக இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருப்பது இந்தியாவில் மிக அரிது. முதன் முதலில் கேரளாவில் உள்ள மாங்காட்டில் இந்த முறையில் இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.
"கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே"
என்ற புறநானூற்றுப் பாடல் தலைவனின் தாழியில் தனக்கும் சேர்த்து இடம் இருக்கும்படி தலைவி அதனை அகலமாகச் செய்யச் சொல்வதாய் உள்ளது. இந்த வழக்கத்தை மெய்ப்பிக்கும் வகையில், ஆதிச்சநல்லூர் புதைமேட்டில் சில இடங்களில் ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்த்து புதைக்கப்பட்டிருந்ததும் சில இடங்களில் தாயும் சேயும் சேர்ந்து புதைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளன. இவை சங்க கால தமிழர்களின் வாழ்க்கைக்கான சான்றாகிறது.
மக்களின் மரபும் நம்பிக்கைகளும்:
இப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு ஒருவிதமான மரபுசார் நம்பிக்கை இருந்திருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் திடமாக நம்புகிறார்கள். அங்கு ஏராளமாகக் கிடைத்தக் காதணிகள் ‘காது குத்துதல்’ போன்ற மரபுசார் வழிபாட்டு முறை இருந்ததை உறுதி செய்வதாக அமைகின்றன. அதேபோல, தாழிகளில் இறந்தவர்களின் உடல்களை இவ்வளவு கவனமாகப் புதைத்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது அவர்களுக்கு ஒருவிதமான நம்பிக்கை இருந்தது வலுவாகச் சுட்டிக் காட்டப் படுகிறது.
காலக்கணிப்பு:
ஆதிச்சநல்லூரின் காலத்தைக் கணிப்பதற்காக இங்கே கிடைத்த பானை ஓடுகள் அமெரிக்காவில் உள்ள பீடா அனலிட்டிகல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு கிடைத்த முடிவுகளின்படி, ஆழத்தில் இருந்த அடுக்கு கி.மு. 750லிருந்து கி.மு. 850ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகத் தெரியவந்தது. நடுவில் இருந்த தாழி கி.மு. 610லிருந்து கி.மு. 650ஆம் ஆண்டுக்குட்பட்டதாகத் தெரியவந்தது. மேலே இருந்த அடுக்கின் காலம் கணிக்கப்படவில்லை. ஆகவே இந்த இடத்தின் காலகட்டம் என்பது கி.மு. 650லிருந்து கி.மு. 850வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில், இரும்புக் காலம் நிலவிய காலகட்டமாகும்.
சிந்துவெளி தொழில்நுட்பத்தின் தொடர்ச்சி:
இங்கு கிடைத்த அனைத்து காதணிகள் மற்றும் உலோகப் பொருட்களில் துத்தநாகம் இருப்பது தெரியவந்திருக்கிறது. எல்லாப் பொருட்களிலும் 3- 6 சதவீதம் அளவுக்கு துத்தநாகம் இருக்கிறது. ஒரு உலோகப் பொருளில் ஒரு சதவீதத்திற்கு மேல் வேறு உலோகம் இருந்தாலே, அவை வேண்டுமென்றே சேர்க்கப்பட்டதாகத்தான் அர்த்தம். இங்கும் மொஹஞ்சதாரோவில் கண்டறியப்பட்ட உலோகப் பொருட்களில் துத்தநாகத்தைக் கலக்கும் வழக்கம் இங்கும் கண்டறியப்பட்டது சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
உணவும் தொழிலும்:
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மண்பாண்டம் செய்திருக்கக்கூடிய இடம், மணிகள் செய்திருக்கக்கூடிய இடம் ஆகியவை தென்பட்டன. மேலும், பானையைச் சுடுவதற்கு முன் அதில் குறியீடுகள் அமைக்கும் திறனும் இங்கு இருந்திருக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கலைவடிவங்களுள் ஒன்றாக இங்கு கண்டெடுக்கப்பட்டப் பானை திகழ்கிறது. அந்தப் பானையின் உட்புறத்தில் நடனமாடும் பெண், கரும்பு போன்ற ஒரு தாவரம், ஒரு கொக்கு, ஒரு முதலை போன்றவை வரையப்பட்டிருந்தன. இவை, இந்தப் பகுதியில் மக்கள் அமைதியாக வாழ்ந்தார்கள் என்பதை உறுதி செய்வதோடு மக்களின் பானைக் குயவும் தொழில் பற்றியும் கூறுகிறது.
இங்கு நிறைய இரும்பால் செய்யப்பட்ட உழுவதற்கான கருவிகள், ஆயுதங்கள் போன்றவையும், சிலத் தாமிரப் பொருட்களும் கிடைத்தன. அவை இங்கு நிகழ்ந்திருக்கக் கூடிய உலோகத் தொழிலைச் சான்று படுத்துகின்றன. மேலும், இங்கே கிடைத்த முதுமக்கள் தாழிகளுக்குள் அரிசி, நெல், பாசிப்பயறு ஆகிய தானியங்கள் கிடைத்தன. அவை இங்கு நடந்த விவசாயம் பற்றியும் மக்களின் உணவைப் பற்றியும் குறிப்புகளைத் தருகின்றன.
இவற்றில் இருந்து, ஆதிச்சநல்லூர் தமிழர் நாகரிகம் என்பதும் அது சிந்து நாகரிகத்துடன் தொடர்புடையது என்றும் அறியமுடிகின்றது. தற்போது ஆதிச்சநல்லூர் பற்றிய அகழாய்வுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. நடக்கவிருக்கும் இந்த ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகள் வரலாற்றை மாற்றலாம்; புதிய கோணத்தை தரலாம். மேலும், 1920-ல் சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி, சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தைய நாகரிகம் தாமிரபரணி கரை நாகரிகம் எனக் கூறியதும் இந்த ஆய்வுகளில் நிரூபிக்கப்படலாம். புதைந்திருக்கும் தமிழர் வரலாற்றை அகழ்ந்தெடுப்போம்.