மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பார்ம் ஈஸி என்ற நிறுவனம், இணைய வழியில் மருந்து பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பொது பங்கீட்டு முறையின் மூலமாக, கடந்த வருடத்தில் 700 மில்லியன் டாலர்கள் நிதியை இந்த நிறுவனம் திரட்டியது. API Holdings என்ற நிறுவனம் Pharm Easy நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும். தற்போது, இந்த API Holdings நிறுவனத்தில், அபுதாபி அரசின் ADIA, 200 - 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், மருந்து பொருட்களின் மாபெரும் இணைய வர்த்தகத் தளமான பார்ம் ஈஸி நிறுவனத்தின் பொதுப்பங்கீட்டு மதிப்பு, பாதி அளவிற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த வருட அக்டோபர் மாத பொதுப்பங்கீட்டில், சுமார் 5.4 பில்லியன் டாலர்களாக இருந்த இந்த நிறுவனத்தின் மதிப்பு, தற்போது, 2.5 - 2.75 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அபுதாபி அரசுடன் இணைந்து, ஜெனரல் அட்லாண்டிக், கனடாவின் CPP இன்வெஸ்ட்மெண்ட் ஆகியவையும் ஏபிஐ ஹோல்டிங்ஸ்சில் முதலீடு செய்ய உள்ளன. அத்துடன், நிறுவனத்தின் பழைய முதலீட்டாளர்களான TPG Growth, Prosus Ventures மற்றும் Temasek ஆகியவையும் 70-100 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்ய உள்ளன. பழைய முதலீட்டாளர்கள் பொது பங்கீட்டில் பங்கு பெற்றாலும், புதிய முதலீட்டாளர்களே பங்கு மதிப்பு குறித்து முடிவு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருட ஐபிஓ வில், ADQ நிறுவனம் 350 மில்லியன் டாலர்களை பார்ம் ஈஸியில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பார்ம் ஈஸி நிறுவனத்தில், Prosus Ventures நிறுவனத்திற்கு 12% பங்குகளும், Temasek நிறுவனத்திற்கு 11% பங்குகளும், TPG Growth நிறுவனத்திற்கு 6.6% பங்குகளும், Evermed holdings நிறுவனத்திற்கு 6% பங்குகளும் உள்ளன. மொத்தத்தில், நிறுவனத்தின் 70% பங்குகள், 43 முதலீட்டாளர்கள் வசம் உள்ளன. அத்துடன், இந்த நிறுவனத்திற்குப் போட்டியாக, டாடா குழுமத்தின் 1mg நிறுவனமும் ரிலையன்ஸ் குழுமத்தின் Netmeds நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. எனவே, சமீபத்திய அபுதாபி அரசின் முதலீடுகள், நிறுவனத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. முன்னதாக, ஏபிஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கீட்டு நிதி, அந்த நிறுவனத்தின் கடனை அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.