இந்தியாவில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அக்சஞ்சர் (Accenture) நிறுவனம் முதன்மையானது. இந்த நிறுவனத்தில் பலர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்து உள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இவ்வாறு போலி ஆவணங்கள் கொடுத்த பணியாளர்களை அக்சஞ்சர் நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. இதுவரை எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போலி ஆவணங்களை சமர்ப்பித்து, மோசடியில் ஈடுபட்டது நிரூபணம் செய்யப்பட்ட ஊழியர்கள் மட்டுமே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் எங்கள் நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு நாங்கள் பணம் எதுவும் வாங்குவதில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறோம். ஆட்சேர்ப்புக்கான எந்த முகவர்களிடமும், முகமை நிறுவனங்களிடமும் நாங்கள் இணையவில்லை. இதனால், ஏதாவது முகமை நிறுவனம், எங்கள் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலித்தால், மக்கள் எச்சரிக்கையாக இருந்து, அது பற்றி அறிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த பணி நீக்க நடவடிக்கையால் நிறுவனத்தின் வாடிக்கையாளர் செயல்பாடுகளில் எந்த குறையும் நேராது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடப்பு ஆண்டில், புதிய பணியாளர்களை பணியமர்த்துவதை நிறுவனம் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.