விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் அனைத்துத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய எம்.பி., ரவிக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட நெல் (20%) , சிறு தானியங்கள் (62.9%), எண்ணெய் வித்துகளின் சாகுபடி இலக்கு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது.
மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டத்தை இயற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
இதையடுத்து விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் அவரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர். அதில், விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை எளிதாகப் பெறக்கூடிய வாய்ப்பை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி ஒன்றை துவக்கவும், வானூர் வட்டத்தில் உளுந்து பதனிடும் அலகு ஆலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.