தமிழகத்தில் நடத்துநர்கள் ரூ.10 நாணயத்தை பெற மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரூ.10, ரூ.20 நாணயங்களை பேருந்து நடத்துநர்கள் பெறுவதில்லை என்ற புகார் உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மத்திய அரசால் வெளியிடப்படும் ரூ.10, ரூ.20 நாணயத்தை, பயணச்சீட்டு வாங்குவதற்காக நடத்துநரிடம் பயணிகள் அளிக்கும்போது, அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு, உரிய பயணச்சீட்டை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இத்தகைய புகார் ஏதும் இல்லாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.