தமிழகத்தில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவை பொருத்தவரை ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே, தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. அதன்படி, ஹெச்பிவி எனப்படும் அந்த தடுப்பூசியை முதல்கட்டமாக தமிழகம், கர்நாடகம், மிசோரம், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவிகளின் விவரங்களை திரட்டி வருகிறோம். மத்திய அரசு சார்பில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர், அதனை முறையாக குளிர்ப்பதன முறையில் பாதுகாத்து பயனாளிகளுக்கு அவர்களது பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.