ஒரு நாட்டின் அடையாளம் அந்த நாட்டின் கொடி, நாணயம், சின்னம் போன்றவையே ஆகும். தேசிய முத்திரை என்பது ஒரு நாட்டின் வீரம், பலம், தியாகம், நீண்ட நெடிய வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வளமை ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். தேசிய அடையாளம் என்பது தேசத்தின் பெருமையைத் தாங்கி நிற்க வேண்டும்.
பழங்காலம் தொட்டே தேசிய அடையாளம் இருந்து வருகிறது. தமிழ் தேசத்தை பல அரச வம்சங்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டு வந்திருக்கின்றன. ஒவ்வொரு அரசப் பரம்பரையும் தங்களுக்கென்று தனி அடையாளம் கொண்டிருந்தனர். அதைப் பற்றிய சில தகவல்கள்:
புலி:
இது சோழர்களின் அடையாள முத்திரையாகும். புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப் பற்றி பல இலக்கியச் சான்றுகள் இருக்கின்றன. புலி முத்திரைப் பதித்த பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சோழர் கால நிகழ்வுகளை விளக்குவதாக இருக்கிறது.
மீன்:
இது பாண்டியர்களின் சின்னமாகும். பாண்டியர்களின் காசுகள் மற்றும் கொடி ஆகியவை இந்த சின்னத்தை தாங்கி நிற்கும். பாண்டியர்களின் பல நாணயங்களில் மீன் போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
வில்:
சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர். அதுவே அவர்களது சின்னமும் ஆயிற்று.
சிம்மம்:
இது பல்லவர்களின் சின்னமாகும். நரசிம்ம வர்மன் வரையில் இருந்த பல்லவர்கள் சிம்ம முத்திரையைத் தங்கள் அடையாளச் சின்னமாகக் கொண்டிருந்தார்கள்.
நந்தி:
நந்திவர்மன் சிம்மக் கொடிக்கு பதில் நந்திக் கொடியை பல்லவர்களின் சின்னமாக மாற்றினான். பின்னர், சிம்மம் பல்லவ மன்னர்களால் போர்க்களங்களிலிருந்து விட பயன்படுத்தப்பட்டது. நாணயங்களில் நந்திச் சின்னம் பயன்படுத்தப்பட்டது.
களிறு:
ஆய் நாடு சங்க கால சிற்றரசுகளில் ஒன்றாகும். அவர்கள் களிறு சின்னத்தைத் தங்கள் அடையாளமாக வைத்திருந்தனர். பின்னர் ஆய் நாடு சேரர்களால் கைப்பற்றப்பட்டு, இந்த சின்னம் பிற்காலத்தில் சேரர்களாலும் பயன்படுத்தப்பட்டது.
சங்கு:
சேரர்கள் வழி வந்த பிற்கால சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் சங்கு சின்னத்தைத் தங்கள் கொடியில் பொறித்துப் பயன்படுத்தினர்.
வராஹம்:
மஹாவிஷ்ணுவின் அவதார வடிவமான வராஹம், சாளுக்கிய வம்சத்தின் அடையாளமாக இருந்தது. பின்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சின்னமாகவும் திகழ்ந்தது.
ஸ்வஸ்திகா:
சமண பௌத்த சமயங்களில் மங்கலச் சின்னமாகக் கருதப்படுவது ஸ்வஸ்திகா சின்னமாகும். களப்பிரர்கள் பெரும்பான்மையாக இந்தச் சின்னத்தைப் பயன்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
தற்காலத்திலும் தமிழர்களுக்கு தனி அடையாளம் வேண்டும். அதுதான் தமிழக அரசின் சின்னம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கோபுரமே இப்போது தமிழகத்தின் சின்னமாக விளங்குகிறது.
ஒரு இனத்தின் அடையாளம்தான் அதை பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கு உதவும். தமிழ் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்திய சின்னங்கள் இவையே.