அதானி குழுமம், வரும் 2030ம் ஆண்டிற்குள் பசுமை எரிசக்தி துறையில் வளர்ச்சி அடைய வேண்டி, 70 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. அதன் பகுதியாக, சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகள், காற்றாலைகள் மற்றும் ஹைட்ரஜன் எலெக்ட்ரோ லைசர்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் 3 ஜிகா தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, யுஎஸ் - இந்தியா பிசினஸ் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட இந்தியா ஐடியாஸ் மாநாட்டில் பேசும்போது, இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இந்தியாவில் கட்டமைக்கப்படும் இந்த தொழிற்சாலை, உலகின் பசுமை எரிசக்திக்கான ஒருங்கிணைந்த மையமாக இருக்கும் என்று கூறினார். சூரிய மின் உற்பத்திக்குத் தேவையான பாலி சிலிக்கான், காற்றாலை விசைப்பொறி, ஹைட்ரஜன் எலக்ட்ரலைசர் போன்றவை இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவித்தார்.
அத்துடன், இந்த தொழிற்சாலைகள் மூலம், அதானி குழுமத்திற்கு, ஏற்கனவே உள்ள 20 ஜிகாவாட் எரிசக்தியுடன், 45 ஜிகாவாட் புத்தாக்க எரிசக்தி கூடுதலாக உருவாக்கப்படும் என்று கூறினார். மேலும், 2030 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் டன் அளவில் ஹைட்ரஜன் உற்பத்தியும் இங்கு மேற்கொள்ளப்படும் என்று கூறினார். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், குறைந்த கார்பன் அளவைக் கொண்ட ஐந்தாவது ஜிகா ஃபேக்டரி அமைப்பது பற்றி அறிவித்திருந்தார். அதன் பிறகு, அதானி குழுமத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் தொடர்ந்து பேசிய கௌதம் அதானி, இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு பொருளாதார வளர்ச்சி, வரும் 2050 ஆம் ஆண்டில், உலகின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் 35 முதல் 40 சதவீதத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்றார். மேலும், அதன் மதிப்பு 70 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இருக்கும் என்று கூறினார். அத்துடன், “2050 ல், இரு நாடுகளின் பெரும்பான்மை மக்களின் வயது 40 ஆக இருக்கும். எனவே, பொருளாதாரக் கண் கொண்டு பார்க்கையில், இரு நாடுகளுக்கு இடையிலான, தற்போதைய 150 பில்லியன் டாலர் வர்த்தகம், கடலில் ஒரு சிறு துளியைப் போன்றதாகும். எனவே, இந்திய அமெரிக்க வர்த்தகம் பன்மடங்கு உயர வேண்டும்” என்று கூறினார்.