அதானி போர்ட்ஸ் (APSEZ) நிறுவனம், இலங்கையில் கொழும்பு துறைமுக முனையத்தை அமைக்கும் திட்டத்திற்காக அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனம் (DFC) வழங்கிய 553 மில்லியன் டாலர் கடனை வாங்க மறுத்துள்ளது. தற்போது, இந்த திட்டத்திற்குத் தேவையான நிதியை நிறுவனத்தின் சொந்த வளங்கள் மற்றும் மூலதனத் திட்டத்தின் மூலம் திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, உள்ளூர் கூட்டாளிகளுடன் இணைந்து இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அதானி நிறுவனம் சூரிய சக்தி திட்டங்களுக்காக 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு இந்தியாவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டை எதிர்க்கவே, அதானி உதவியை மறுப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, வரும் டிசம்பர் 15 முதல் 17 வரை இந்தியாவிற்கு வருகை தரவுள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இது பற்றிய முடிவுகளை அறிவிப்பார் என்று கருதப்படுகிறது.