ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்கள் வசதிக்காக பதிவு வில்லைகள் அதிகரித்து வழங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் காரணத்தால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான ஆகஸ்ட் 28 மற்றும் 29-ம் தேதிகளில், ஒரே சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 வில்லைகள், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 வில்லைகள் ஒதுக்கப்படும். மேலும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 150 சாதாரண வில்லைகளுடன் கூடுதலாக 16 தட்கல் முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.