சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே தினமும் 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனினும், காலை, மாலை நேரங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்ட 3-வது புதிய பாதையில் கடந்த மே மாதம் ரயில் சேவை தொடங்கியது. இருந்தாலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால், வண்டலூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் இருந்து பயணம் செய்பவர்கள் தாம்பரம் வந்து, மற்ற மின்சார ரயில்கள் மூலம் சென்னைக்குச் செல்கின்றனர். எனவே, தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஓரிரு மாதங்களில் கூடுதல் புறநகர் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்ட 3-வது பாதையில் இப்போது, மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்தப் பாதையில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டதன் மூலமாக, அதிக ரயில்களை இயக்க முடியும். இதன் காரணமாக இந்தப் பாதையில் நெரிசல் குறையும். கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் எதிர்காலத்தில் கூடுதல் புறநகர் ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.