எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் அதானியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை தெரிவித்தது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்து வருகிறது. இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக, திரிணமுல் காங்கிரஸ்,சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதானி பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என ராஜ்யசபாவில் கார்கே, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், டிஆர்எஸ் கட்சியின் கேசவராவ் ஆகியோர் நோட்டீஸ் அளித்தனர். அதில், பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிறுவனத்தின் பங்குகளை பொதுத்துறை வங்கிகள், எல்ஐசி மற்றும் நிதிநிறுவனங்கள் பங்குகள் குறித்து விவாதிக்க வேண்டும். இதற்கு கேள்வி நேரம், ஜீரோ ஹவரை ஒத்தி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.