நீட் தேர்வை கட்டாயமாக்கியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசும், மக்களும் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் சட்ட ரீதியாகவும் தமிழ்நாடு அரசு போராடி வருகிறது.
அதிமுக ஆட்சியில் நீட் தேர்வினை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. தற்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து விரிவான புள்ளிவிவரங்களை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.