ஆப்கானிஸ்தான் நாட்டில், தாலிபான்கள் ஆட்சி தொடங்கியதில் இருந்து, பெண்களுக்கான ஒடுக்கு முறைகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு வர பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த இரு இடங்களுக்கு பெண்கள் வருவது தடை செய்யப்பட்டதற்கு கூறப்படும் காரணம் - “இந்த இடங்களில் பாலின பாகுபாடு முறையாக பின்பற்றப்படவில்லை. மேலும், பெண்கள் இந்த இடங்களில் ஹிஜாப் அணிவதில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாலிபான்கள் தரப்பில் இருந்து, “நாங்கள், கடந்த 15 மாதங்களாக, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு பெண்கள் வருவதை கூடுமானவரை அனுமதித்து வந்தோம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வெவ்வேறு நாட்களில் இந்த இடங்களுக்கு அனுமதி கொடுத்திருந்தோம். ஆனால், எங்களது கட்டளைகள் மீறப்படுகின்றன. எனவே. தற்போது தடை விதித்துள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.