பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஆப்கான் பெண்கள் தங்களுடைய கல்வி உரிமைக்காக குரல் எழுப்பி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் இங்கு பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. பூங்கா, உடற்பயிற்சி நிலையம், கல்விக்கூடம், பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பொது இடங்கள் செல்ல அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கல்வி கற்க விரும்பும் பெண்கள் வெளிநாடுகளில் சென்று படிக்கின்றனர். இதுவரை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து 1.1 மில்லியனுக்கும் அதிகமான பெண்களை தடை செய்தது தலிபான்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை மிகவும் மோசமானவை என்று கடந்த மாதம் ஐ.நா. அறிக்கை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஆப்கான் பெண்கள் தங்களுடைய கல்வி உரிமைக்காக குரல் எழுப்பி வருகின்றனர். இது ஒரு இயக்கமாக உருவெடுத்துள்ளது.
தற்போது சமூக தளங்களில் ஐநாவின் 'கல்வி காத்திருக்க முடியாது' என்ற பிரச்சாரத்தின் வாயிலாக நெருக்கடியை எதிர்த்துப் போராட உலகளாவிய நிதி வேண்டப்படுகிறது. "இந்தப் பிரச்சாரம் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமிகளின் கல்விப் பிரச்சனைகளுக்கு மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது" என்று ஃபாருகி என்ற ஆப்கன் நாட்டு பெண் தெரிவித்தார். இவர் தற்போது அமெரிக்காவில் தங்கி கல்வி பயில்கிறார்.
இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், "பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் உண்மையில் ஆதரிக்கப்படும் வரை, தலிபான்களுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான உறவு தடுக்கப்படும்" என்று கூறினார்.