ஆப்பிரிக்க நாடுகள் தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையத்தின் நிர்வாகச் செயலர் க்ளேவர் கேட்டே எச்சரித்துள்ளார். ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க மேம்பாட்டு சமூகக் கூட்டத்தில் பேசிய அவர், “ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் $1 டிரில்லியனுக்கும் அதிகமான கடன் சுமை உள்ளது. இந்த கடன் சுமையால் பல நாடுகள் கடன் செலுத்துவதில் சிரமப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மூன்றில் ஒரு பங்கு ஆப்பிரிக்க நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது” என்று கூறினார்.
ஆப்பிரிக்காவின் கடன் நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, சலுகை நிதி, வளர்ச்சி உதவி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து வருவது முக்கிய காரணமாகும். மேலும், காலநிலை மாற்றத்தின் தாக்கமும் ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகிறது. சராசரியாக ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% இழப்பு ஏற்படுவதாகவும், மொசாம்பிக் போன்ற சில நாடுகள் கடந்த ஆண்டு மட்டும் 15% மொத்த உள்நாட்டு உற்பத்தியை இழந்ததாகவும் கேட்டே தெரிவித்தார். மேலும், ஆப்பிரிக்கா, தனது தேவைகளை சிறப்பாக நிவர்த்தி செய்ய, உலக நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி உள்ளார்.