10 ஆண்டுகளுக்கு பின்னர் தூதர்களை துருக்கி-எகிப்து நாடுகள் மீண்டும் நியமித்துள்ளது.
எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சியை, கடந்த 2013-ம் ஆண்டு அந்த நாட்டின் ராணுவம் ஆட்சியில் இருந்து அகற்றியது. இதற்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன. கடந்த 10 ஆண்டுகளாக இரு நாடுகளின் உறவில் விரிசல் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதன்படி துருக்கி நாட்டுக்கான எகிப்து தூதராக அமர் எல்ஹமாமி மற்றும் எகிப்துக்கான துருக்கி தூதராக சாலிஹ் முட்லு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், `இந்த நடவடிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒருமுறை இயல்பான உறவு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.