கொரோனா வைரஸ் பாதிப்பு, சுவாச மண்டலத்தை பாதித்ததுடன், மனிதனின் அறிவாற்றல் செயல்பாட்டையும் பாதித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரசால் பாதிப்படைந்த பல தரப்பு மக்களிடம் இருந்தும், தினசரி வேலைகளை செய்வதில் சிக்கல்கள் மற்றும் மூளையின் செயல்பாட்டில் மந்த நிலை அல்லது சுணக்கம் இருப்பது தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடுமையான கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள், பிரைன் ஃபோக் எனப்படும் மூளை மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிப்படைந்தவர்களிடம் கேள்வி பதில் அடிப்படையிலான ஆய்வை, பிரிட்டனின் ஹால் பல்கலைக்கழகம் மற்றும் யோர்க் ஹால் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின. இந்த ஆய்வில் 5400 பேர் பங்கேற்றனர். கொரோனா பாதிப்புக்கு பின், உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அதில் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், குறிப்பாக 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மூளை அறிவாற்றல் செயல்பாடு பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.