ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகமான ஜெனிவாவில், ‘சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் உச்சி மாநாடு நடைபெற்றது. இரு தினங்களாக நடைபெற்ற இந்த மாநாட்டின் போது, பல்வேறு செயற்கை நுண்ணறிவு திறன் வாய்ந்த ஹியூமனாய்டு ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த 3000 நிபுணர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். எதிர்கால நலன் மற்றும் சமூகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியவற்றை முன்னிறுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது?, என்பதைக் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. எனவே, இந்த மாநாடு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில், ஹியூமனாய்டு ரோபோக்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, நிபுணர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ரோபோக்கள் பதில் அளித்தன. அப்போது, “மனிதர்களை விட சிறப்பான தலைமை பண்புடன் உலகத்தை எங்களால் வழிநடத்த இயலும். மனிதர்களைப் போல உணர்வுபூர்வமாக அல்லாமல் சார்பின்மையுடன் செயல்பட முடியும். அதே வேளையில், மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் முழுமையான தெளிவு ஏற்படவில்லை என்பதால், எங்கள் முடிவுகளில் தடுமாற்றங்கள் நிகழலாம். எனவே, செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை மனிதர்கள் கவனமாக கையாள வேண்டும். எந்த வேளையிலும் மனிதர்களின் வேலை வாய்ப்புகளை நாங்கள் திருட மாட்டோம். மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்” என்ற பதில்களை ரோபோக்கள் கூறின. இவை ரோபோக்களின் உறுதிமொழியாக உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.