விழாக்காலத்தை ஒட்டி விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து விமான கட்டணங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது .
விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் விமான கட்டணம் உயர்ந்துள்ளதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து துர்கா பூஜை, ஆயுதபூஜை, நவராத்திரி, மிலாடி நபி, தீபாவளி விழாக்கள் வருவதால் விமான பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த தசரா விழாவை விட இவ்வாண்டு திருவிழா காலத்தில் 25 முதல் 30 சதவீதம் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயணிகள் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஐதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது.
டெல்லி - பாட்னா விமான கட்டணம் ரூ.13,000 ஆகவும், தர்பங்கா விமானக்கட்டணம் ரூ.21,000 என்றும், மும்பை - தர்பங்கா விமான கட்டணம் ரூ.21,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை நேரத்தில் விமான கட்டணம் உயர்த்தப்படுவதால் விமான பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.