பெங்களூருவில் நடைபெறும் ஏரோ இந்தியா கண்காட்சியில் ‘வாயுலிங்க்’ என்ற கருவி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து விங் கமாண்டர் விஷால் மிஸ்ரா கூறியதாவது: வாயுலிங்க் என்பது தகவல் தொடர்பு சாதனம். இதை விமானத்தில் பொருத்தும் போது பல விதமான தகவல்களை எந்த இடையூறும் இன்றி பெற முடியும். போர் சமயத்தில், தரைப் பகுதியில் சொந்த நாட்டுபடையினர் எங்கு உள்ளனர் என்பதையும் இந்த கருவி தெரிவிக்கும். சொந்த படையினாரல் சுடப்படும் சம்பவத்தை இந்த கருவி தடுக்கும். இது தான் இந்த கருவியின் முக்கியமான தொழில்நுட்ப அம்சம்.
விமானங்கள் மோதிக் கொள்வதையும் ‘வாயுலிங்க்’ கருவி தடுக்கும். பல பகுதிகளில் இருந்து குழுக்களாக வந்து இலக்கை நோக்கி செல்லும்போது, அவர்களுடன் இணைந்து சிறப்பாக செயல்படவும் இந்த கருவி பெரிதும் உதவும். மலைகளுக்கு உயரே பறக்கும் சமயத்தில், ரேடியோ தகவல் தொடர்பு இல்லாதபோது, இந்த கருவியால் ரேடியோ தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியும். ஜாமர்கள் மூலம் இதன் தகவல் தொடர்பில் இடையூறு ஏற்படுத்த முடியாது. இவ்வாறு விஷால் மிஸ்ரா கூறினார்.