ஏர் இந்தியா விமான நிறுவனம், சர்வதேச அளவில் விமான போக்குவரத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. எனவே, அதன் அகலமான விமான வகையான போயிங் 777 விமானங்களை இயக்க வெளிநாட்டு விமானிகளை பணி அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல முகமை நிறுவனங்களை தொடர்பு கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 100 வெளிநாட்டு விமானிகள் பணியமர்த்தப்படுவர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வெளிநாட்டு விமானிகளுக்கான சம்பளம் உள்நாட்டு விமானிகளைக் காட்டிலும் அதிகம். எனவே, கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு விமானிகள் பணியமர்த்தப்படுவதை நிறுவனம் நிறுத்தியது. ஆனால், ஏர் இந்தியா விமான நிறுவனம், வணிகத்தை விரிவாக்க பல திட்டங்கள் வகுத்துள்ளதாக அண்மையில் தெரிவித்தது. அதன்படி, புதிய போயிங் விமானங்களை வாங்கவும், அவற்றை இயக்க புதிய வெளிநாட்டு விமானிகளை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.