வான்வழிப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 27 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வான்வழிப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 27 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் உள்ளிட்ட பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மொத்தமாக இந்தியாவில் 430 விமானங்கள் மற்றும் பாகிஸ்தானில் 147 விமானங்கள் சேவையில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. மே 10 காலை 5.29 மணி வரை இந்த முடக்கம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், ஜோத்பூர் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்கள் இதில் அடங்குகின்றன.