கூட்ட நெரிசலை குறைக்க மின்சார ரெயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றபடுகிறது.
சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் உள்ளது. சென்னை கடற்கரை மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி வழித்தடங்களில் சுமார் 500 மின்சார ரெயில்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் சில மின்சார ரெயில்களை தவிர, மற்ற அனைத்து ரெயில்களும் 12 பெட்டி மின்சார ரெயில்களாக இயக்கப்படுகின்றன.
ஆனால், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 60 சதவீத மின்சார ரெயில்களில் மட்டுமே 12 பெட்டிகள் உள்ளன. மீதமுள்ள 40 சதவீத ரெயில்கள், 9 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் அனைத்து மின்சார ரெயில்களையும் 12 பெட்டிகளாக மாற்ற உள்ளனர். இதற்கான பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மின்சார ரெயில்களும் 12 பெட்டிகளாக மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.