ஆதிதிராவிடர் - பழங்குடியினர் துணை திட்டங்களுக்கு ரூ.18,670 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னதமான நோக்கம் கொண்ட திராவிட மாடல் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான ரூ.77,930 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்துக்காக ரூ.17,075 கோடி மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்துக்காக ரூ.1,595 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதற்கான சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.