வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள 4,430 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெற்று வருகின்றனர். அவ்வாறு பயிற்சிபெறும் காலத்தை அங்கீகரிப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட உள்ளுறை பயிற்சி இடங்களை மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 562 இடங்கள், அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் 3,868 இடங்கள் என மொத்தம் 4,430 இடங்கள் நிகழாண்டில் உள்ளுறை பயிற்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.