அமேசான் நிறுவனம் இந்தியாவில் மேலும் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது.
இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் வெள்ளைமாளிகையில் அமெரிக்க-இந்திய தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்நிலையில் பிரதமர் மோடியை உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் வலைதளமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் அண்டி ஜெசி சந்தித்தார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமேசான் தலைவர், இந்தியாவில் அதிக முதலீடு செய்த நிறுவனங்களில் அமேசான் முக்கிய நிறுவனமாகும். தற்போதுவரை நாங்கள் இந்தியாவில் 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளோம். தற்போது நாங்கள் இந்தியாவில் மீண்டும் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் எங்கள் முதலீடு 26 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.