இணைய வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனம், தனக்கான பிரத்தியேக சரக்கு போக்குவரத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரைன் ஏர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சரக்கு போக்குவரத்து முறை, இந்தியாவில் ஜனவரி மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சரக்கு விமான நிறுவனமான குவிக்ஜெட், பிரைம் ஏருக்கான விமானச் சேவைகளை வழங்க உள்ளது.
தொடக்கத்தில், போயிங் 737-800 ரக 2 விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றில் 23.9 டன் வரை சரக்குகளை ஏற்றிச் செல்லலாம். இவ்வருட இறுதிக்குள், விமானங்களின் எண்ணிக்கையை ஆறாக உயர்த்த, அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை கடந்து, அமேசான் நிறுவனம், பிரத்தியேகமான சரக்கு போக்குவரத்தை முதல் முறையாக இந்தியாவில் தான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாள் டெலிவரி எளிதாக்கப்படும் என்று கூறப்படுகிறது.