இதுவரை இல்லாத அளவிற்கு, 2022 ஆம் ஆண்டு, சுமார் 82000 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க மாணவர் விசா வழங்கப்பட்டு, புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க கல்வி நிலையங்களில் பயிலும் பிற நாட்டு மாணவர்களில் 20 சதவீதத்தினர், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் தூதரகத் துறை சார்ந்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில், “இந்த ஆண்டு, 82000 க்கும் அதிகமான இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கியதில் மகிழ்ச்சி கொள்கிறோம். கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் விசா வழங்கும் முறையில் தொய்வு ஏற்பட்டது. அதனை, இந்த ஆண்டின் விசா ஈடு செய்துள்ளது. இதன் மூலம், இந்திய குடும்பங்களில், உயர் கல்விக்கான முதன்மை நாடாக அமெரிக்கா இருப்பது உறுதியாகிறது. இது, இரு நாட்டு உறவுகள் மற்றும் தொடர்புகளை மேம்படுத்துகிறது. எதிர்கால சர்வதேச உறவுகளை வலுப்படுத்துகிறது. குறிப்பாக, இந்திய மாணவர்கள், இரண்டு நாடுகளுக்கும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்குகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2020 - 21 ஆம் கல்வியாண்டில், சுமார் 167582 இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றுள்ளனர். இது அமெரிக்காவில் பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில், 20 சதவீதம் ஆகும். இதனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு, நடப்பு கல்வி ஆண்டில், இந்தியாவின் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் மாணவர் விசா வழங்குவது முதன்மையாகச் செயல்படுத்தப்பட்டது. கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில், பல்வேறு திறமையான மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகத்துறை அமைச்சர் டான் ஹெபிளின், இந்த கல்வியாண்டில் அமெரிக்காவில் பயிலவிருக்கும் இந்திய மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலத்திலும், அமெரிக்கா, உயர் கல்விக்கான கதவுகளை திறந்தே வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இணையம் வாயிலாகவும், நேரிலும், கல்வி பயிலும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வந்தது.