விமானத்தில் அவசர கதவை திறந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து திருச்சிக்கு கடந்த டிச.10-ம் தேதி 70 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன் விமானம் தயாரான நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் இருந்த அவசர கால வழிக்கான கதவை பயணி ஒருவர் திறந்துள்ளார். இதையடுத்து விமானத்தில், விதிமுறைகளின்படி சோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகே விமானம் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அதில், ‘‘கடந்த டிச.10-ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக விமானம் புறப்படும்போது ஒரு பயணி அவசர வழிக்கான கதவைத் திறந்து பயணிகள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் தரப்பில், ‘‘விமானம் புறப்படும்போது தவறுதலாக ஒரு பயணி அவசர வழிக்கான கதவைத் திறந்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். விதிமுறைப்படி பொறியியல் ரீதியாக சோதனையிட வேண்டியிருந்ததால் விமானம் புறப்படத் தாமதமானது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.