அண்ணா பல்கலை பருவத்தேர்வு மறுமதிப்பீட்டில் தவறு செய்த 2 அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 ஏப்ரல், நவம்பர் மாதங்களில் நடந்த பருவத் தேர்வுகளில் தோல்வி அடைந்த, குறைந்த மதிப்பெண் பெற்ற சுமார் 3 லட்சம் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததாகவும், அதில் சிலருக்கு தேர்ச்சி மதிப்பெண், கூடுதல் மதிப்பெண் வழங்க பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் உட்பட பேராசிரியர்கள் பணம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, முறைகேட்டில் சம்பந்தப்பட்ட 4 பேராசிரியர்களையும் அண்ணா பல்கலை தற்காலிக பணிநீக்கம் செய்தது. இது குறித்து முடிவு எடுக்க 2021-ல் முன்னாள் துணைவேந்தர் எஸ்.காளியப்பன் தலைமையில் ஒருநபர் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீனிவாசலு, முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வமணி ஆகிய 2 பேரையும் உதவி பேராசிரியர்கள் நிலைக்கு பதவி இறக்கம் செய்யவும், வரும் காலத்தில் நிர்வாக பதவிகளை இவர்கள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.