'குரூப் - 4' தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உட்பட 11 பதவிகளில் 7,301 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு ஜூலை 24ல் குரூப் - 4 தேர்வை நடத்தியது. தேர்வில் 20 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி முடிவு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிடுமாறு தேர்வர்கள் நேற்று சமூக வலைதளத்தில் 'ஹேஷ்டேக்' பதிவிட்டனர். இதையடுத்து 'குரூப் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.