தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி கிராமம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள 477.24 ஏக்கர் நிலப்பரப்பை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமாக உயிரிய பன்முகச் சட்டம் - 2002ன் கீழ், தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாகும். இப்பகுதியில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள், மூன்று தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி 16ம் நுாற்றாண்டில் பாண்டியர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது. மலைப் பகுதிகளில் 250 பறவை இனங்கள் உள்ளன.
மேலும் அங்கு சமண சிற்பங்கள், சமண படுகைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2,200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவில்கள் உள்ளன. இந்த வரலாற்று சின்னங்கள், இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கின்றன. இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்று களஞ்சியத்தை பாதுகாக்க வனத்துறை உதவும் என வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.