போயிங்கின் இன்டெல்சாட் 33e செயற்கைக்கோள் அக்டோபர் 20 அன்று சுற்றுப்பாதையில் உடைந்து சிதறியது. இந்த சம்பவம் ஐரோப்பா, மத்திய ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் செயற்கைக்கோள் சேவைகளை பாதித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் 35,000 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் திடீரென மின்சாரம் இழந்து, குறைந்தது 20 துண்டுகளாக உடைந்துள்ளது.
2016 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இன்டெல்சாட் 33e செயற்கைக்கோள் தொடக்கத்திலிருந்தே பல்வேறு தொழில்நுட்ப குளறுபடிகளை எதிர்கொண்டது. குறிப்பாக, உந்துவிசை தொடர்பான பிரச்சினைகள் நீண்ட காலமாகவே இருந்து வந்தன. இந்த சம்பவத்தால் விண்வெளி குப்பைகளின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது 10 சென்டிமீட்டர் அளவுக்கும் அதிகமான 40,000க்கும் மேற்பட்ட விண்வெளி குப்பைகள் சுற்றுப்பாதையில் உள்ளன. இந்த குப்பைகள் மற்ற செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. விண்வெளியில் செயற்கைக்கோள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விண்வெளி குப்பைகளை அகற்றுவது மிகவும் அவசியமாகிவிட்டது. ஆனால், இதற்கான பொறுப்பு யாருடையது என்பது குறித்த தெளிவான விதிமுறைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை.