மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் ஒரு இணையதளத்தை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக, கடந்த மாதம் 28-ம் தேதி முதல் வரும் டிச.31-ம் தேதி வரை சிறப்பு முகாமை மின்வாரியம் நடத்துகிறது. தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் https://adhar.tnebltd.org/Aadhaar என்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நாளுக்கு நாள் ஆதார் எண்ணை இணைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக bit.ly/linkyouraadhar என்ற புதிய இணையதளத்தை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இதில், ஆதார் அட்டை நகலை பதிவேற்ற வேண்டியது இல்லை. ஆதார் எண்ணை பதிவு செய்தால் போதும் என்று மின்வாரிய அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.