ஆயுத உற்பத்தி தொடர்பான பொருட்களை ரஷ்யாவுக்கு சீனா தொடர்ந்து விற்பனை செய்தால் அதன் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தகத்தில் பதற்றம் நிலவுகிறது. அதனை தணிப்பதற்காக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிளிங்கன் இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் கூறியதாவது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வது, போதை மருந்து கடத்தலை தடுப்பது போன்ற விவாதங்களில் ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளது. விரைவில் செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து இரு நாடுகளும் விவாதிக்க உள்ளன. அதே சமயத்தில் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தியை மேம்படுத்த தேவைப்படும் மின்னணு பொருட்கள், நைட்ரோ செல்லோஸ், இயந்திர கருவிகள், ஏவுகணை குண்டுகளை செலுத்தும் பாகம் ஆகியவற்றை சீனா ரஷ்யாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பிளவு ஏற்படுத்துகிறது.
சீனா செய்யும் உதவியால் உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்ய தீவிரப்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை புரிந்து கொண்டு சீனா செயல்படாவிட்டால் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என்றார்.