தமிழகத்தில் குட்கா-பான் மசாலா தடை ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில் ஆணையரின் உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்ற நடவடிக்கைகளும் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா வரவில்லை. அவசர நிலை கருதி இது போன்ற புகையிலை பொருட்களை அதிகபட்சமாக ஓராண்டு வரைதான் தற்காலிகமாக தடை செய்ய ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. இதனால் புகையிலை பொருட்களுக்கு விதித்த தடை ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.