ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்பை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றுவதற்கு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், ஐபோன் கைபேசிக்கான கேமரா பாகங்களை கொள்முதல் செய்வதற்கு இந்திய தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு வருகிறது. டைட்டன் மற்றும் முருகப்பா குழுமத்துடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இவை இரண்டில் ஏதாவது ஒரு நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் கூட்டணியில் இணையலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
டைட்டன் மற்றும் முருகப்பா குழுமங்கள் ஐபோனுக்கு தேவையான கேமரா பாகங்களை உருவாக்கி வழங்க உள்ளன. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவுகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் முழுமை அடையும் பட்சத்தில், ஐபோன் தயாரிப்பை இந்தியாவுக்கு நகர்த்த ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ளும் முக்கிய முன்னெடுப்பாக இது இருக்கும்.