தொழில்நுட்பத் துறையில், ஆப்பிள், ஆல்பாபெட், மெட்டா, அமேசான் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், புதன்கிழமை வர்த்தக நிலவரப்படி, ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மற்ற மூன்று நிறுவனங்களின் சந்தை மதிப்பு கூட்டுத் தொகையை விட உயர்வாகப் பதிவாகியுள்ளது. புதன்கிழமை வர்த்தக நேர முடிவில், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.307 ட்ரில்லியன் டாலர்களாக இருந்தது. அதே வேளையில், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.126 ட்ரில்லியன் ஆகவும், அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 939.78 பில்லியன் ஆகவும், மெட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 240.07 பில்லியன் ஆகவும் பதிவாகி இருந்தது. எனவே, இந்த மூன்று நிறுவனங்களின் சந்தை மதிப்பு கூட்டுத்தொகை 2.306 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். இதனால், ஆப்பிள் நிறுவனம் மற்ற மூன்று நிறுவனங்களை விட பெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலகளாவிய முறையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் செயல்பாடுகளால், தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி குறைந்துள்ளது. ஆப்பிள் தவிர மற்ற நிறுவனங்கள் சரிவை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, அமேசான் நிறுவனம் டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு குழுவில் இருந்து வெளியேறி உள்ளது. பங்குச்சந்தை நிலவரம் அடிப்படையில் கடந்த ஐந்து செஷன்களின் முடிவுகள் வருமாறு: ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 0.16 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே வேளையில், ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகள் 5.7 சதவீதமும், அமேசான் நிறுவனத்தின் பங்குகள் 17 சதவீதமும், மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 7.6 சதவீதமும் சரிந்துள்ளன. இந்நிலையில், இந்த சந்தை நிலவர விபரங்கள் வெளியானதால், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் மேலும் உயர்ந்து வருகிறது.