ஆப்பிள் நிறுவனம், தனது அறி திறன் பேசிகளுக்கான குரல் கட்டளையை 'ஹே சிரி' என்று செயல்படுத்தி இருந்தது. அதனை தற்போது 'சிரி' என்று மாற்றவுள்ளது. இது 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரல் கட்டளையை நடைமுறைப்படுத்த அதிகமான செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் ஏற்படுத்த வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
'ஹே சிரி' என்பது இரண்டு வார்த்தைகளாக உள்ளது. இதனால், பயனாளரின் கட்டளையை ஏற்பதில் கால தாமதம் ஆகிறது. எனவே, அதனை ஒற்றை வார்த்தையாக மாற்ற ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் போட்டி நிறுவனங்களும் இதே போன்ற ஒற்றை வார்த்தை அழைப்புகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனம் 'அலெக்ஸா' என்ற அழைப்பையும், கூகுள் நிறுவனம், 'ஹே கூகுள்' அல்லது 'ஓகே கூகுள்' என்ற அழைப்பையும் ஏற்கின்றன. மேலும், அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனமும், 'ஹே கொர்டானா' என்ற இரட்டை வார்த்தை அழைப்பிலிருந்து, 'கொர்டானா' என்ற ஒற்றை வார்த்தை அழைப்பாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.