தமிழகத்தில் கலைஞர்களை கௌரவப்படுத்தும் கலைச்செம்மல் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த கலை வல்லுநர்கள், நவீனபாணி கலைவாணர்கள் கலைத்துறையில் செய்துள்ள சாதனைகள் மற்றும் சேவைகளை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் ஆறு கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2024 - 25 ஆம் ஆண்டிற்கான கலைச்செம்மல் விருதுக்கு 50 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கலை பண்பாட்டு துறை அறிவித்துள்ளது. அதில் கலைச்செம்மல் விருதிற்கு படைப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் அல்லது கலை அமைப்புகளோ, அரசு நிறுவனமோ, தனி நபர்களோ தகுதி வாய்ந்த கலைஞர்களை பரிந்துரைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கலை பண்பாட்டுத்துறை இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை -60008 என்ற முகவரிக்கு ஜூலை ஒன்றாம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது