தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணிகளுக்கு கூடுதலாக 5 முதல் 20 பேர் வரை உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிவு அடைந்த நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பணிகளுக்காக தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஓட்டு எண்ணும் பணிக்காக கூடுதலாக 5 முதல் 20 பேர்கள் வரை உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தென் சென்னைக்கு துணை கலெக்டர்கள், தாசில்தார், ஸ்பெஷல் தாசில்தார் என பத்து பேர்கள் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் , கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்