நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்று, பல்வேறு நிறுவனங்களில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,425 பட்டதாரிகளுக்கு, இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழகத்தில் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களது வேலைவாய்ப்புக்கு வழிகாட்டப்படுகிறது. அந்த வகையில் திறன் பயிற்சி பெற்ற 1,425 கலை-அறிவியல் பட்டதாரிகள், வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.