மூக்கு வழியே செலுத்தும் கோவிட் தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்கு வழியே செலுத்தப்படும் கோவிட் தடுப்பு மருந்தை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கோவிட்டிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் புது உத்வேகம் கிடைத்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியே செலுத்தப்படும் கோவிட் தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசர காலத்தில் பயன்படுத்த டிஜிசிஏ ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில், கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தில் அறிவியல் ஆராய்ச்சி, அறிவியல் வளர்ச்சி மற்றும் மனித வளத்தை இந்தியா பயன்படுத்தி வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தப்படும் முதல் மருந்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.