ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவு, சலுகை விலையில் அதிகம் விற்பனையாகும் அத்தியாவசிய பொருட்களை விற்க உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, வீட்டு பராமரிப்பு மற்றும் தனிநபர் நலன் சார்ந்த பொருட்களை 30 முதல் 35% சலுகை விலையில் விற்க உள்ளது. இதன் மூலம், நாடு தழுவிய முறையில், ரிலையன்ஸ் குழுமத்தின் பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படும். மேலும், “அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள், சோதனை அடிப்படையிலாவது ரிலையன்ஸ் பொருட்களை வாங்க முற்படுவர். எனவே, விற்பனை நிச்சயம் அதிகரிக்கும்” என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ரிலையன்ஸ் நிறுவனம், குளிர்பான துறையில் தனது கேம்ப கோலா பானத்தை, கொக்கோ கோலா, பெப்சி போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் அறிமுகம் செய்தது. தற்போது, சலவை சோப்புகள், சலவை பவுடர்கள், குளியல் சோப்புகள், டிஷ் வாஷர்கள் போன்றவற்றை சலுகை விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் துறையில் முன்னணியில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திற்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.